மும்பை : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி பயணத்தை இங்கிலாந்து அணி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது ஆஸ்திரேலிய அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதன் பிறகும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து 14 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று அசத்தியது.

இந்த சூழலில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்தீவ் ஷார்ட் 16 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நட்சத்திர வீரர் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். கேமரன் கிரீன் தன் பங்குக்கு 42 ரன்கள் சேர்க்க, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அப்போது கீழ் வரிசையில் களமிறங்கிய அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கெரி பொறுப்பாக விளையாடி 77 ரன்கள் சேர்த்தார். அவருக்கு மேக்ஸ்வெல் 30 ரன்களுடனும் ஆரோன் ஹார்டி 44 ரன்கள் எடுத்தும் துணை நின்றனர்.
இதனால், ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பில் சால்ட் டக் அவுட்டாகியும், பென் டக்கட் 8 ரன்களிலும் வெளியேறினர்.
இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஹாரி புரூக் ஜோடி அபாரமாக விளையாடினர். வில் ஜாக்ஸ் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் நிதானம் காட்டி 82 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். ஆனால் மறுமுனையில் இங்கிலாந்து அணி தற்காலிக கேப்டனாக களம் இறங்கிய ஹரி புரூக் 87 பந்துகளில் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்திருந்ததது.
ஆட்டத்தின் 37.4 வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. மீண்டும் ஆட்டத்தை தொடங்க முடியாத நிலை இருந்ததால் டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்ற வந்த ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 110 ரன்கள் எடுத்த ஹாரி புருக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.