பிரிஸ்டோல்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று தரமான கம்பேக்கை கொடுத்தது. இதனால் 4 போட்டிகளில் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற நிலையில் உள்ளன.

இதனால் தொடரை வெல்லப் போவது யார் என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 309 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.
சிறப்பாக ஆடிய பென் டக்கெட் 91 பந்துகளில் 2 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 107 ரன்கள் விளாசினார். அதேபோல் கேப்டன் ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 72 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் ஒரு சதம், 2 அரைசதங்கள் உட்பட 312 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக விராட் கோலி 310 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 310 ரன்களை விளாசி இருந்தார். இந்த சாதனையை இங்கிலாந்து அணிக்காக கேப்டன் பதவியை ஏற்ற முதல் தொடரிலேயே ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ள ஹாரி ப்ரூக், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். கேப்டன்சி வந்த போதும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் பேட்டிங்கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.