தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைவதை பார்க்க சோகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ரைவல்ரியை பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை. அந்த அளவிற்கு இரு அணிகளும் மூர்க்கமாக மோதிக் கொள்வார்கள். அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து அடைந்து வரும் தோல்விகளை வைத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சீண்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளிடம் தோல்வி அடைந்தாலும், சிறிய அணிகளான ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடமும் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் களத்தில் வெற்றிக்காக கொஞ்சம் கூட போராடாமல் இங்கிலாந்து அணி சரணடைவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இதனிடையே டிஃபெண்டிங் சாம்பியன் என்று சொல்லாதீர்கள், பெயரில் கூட டிஃபென்ஸ் இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பட்லர் கூறியது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தோல்விக்கு இங்கிலாந்து அணியின் அணுகுமுறையே காரணமாக பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கம்மின்ஸிடம், இங்கிலாந்து அணியை எதிர்த்து இன்னும் சில நாட்களில் விளையாடப் போகிறீர்கள்.

அவர்கள் அடுத்தடுத்து அடைந்து வரும் தோல்விகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இங்கிலாந்து அணியை பற்றி செய்தியாளர் பேச தொடங்கியதுமே சிரிக்க தொடங்கிய பேட் கம்மின்ஸ், உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தோல்வியடைவதை பார்க்கவே சோகமாக தான் உள்ளது என்று நக்கலாக தெரிவித்துள்ளார். பேட் கம்மின்ஸ் சிரித்து கொண்டே சோகமாக இருப்பதாக அளித்த பதில், இங்கிலாந்து ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.