அறிமுகம்
ஜோப்ரா ஆர்ச்சர் உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பு தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். அதற்கு முன் டி20 தொடர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார்.
மின்னல் வேகம்
அப்போதே ஜோப்ரா ஆர்ச்சர் தனக்கென ஒரு பெயரை எடுத்துக் கொண்டார். அவரது மின்னல் வேக பந்துவீச்சு கிரிக்கெட் உலகில் பிரபலமாக இருந்தது. எனினும், அவர் இங்கிலாந்து நாட்டு குடிமகன் இல்லை என்பதால் சர்வதேச போட்டிகள் களமிறங்க அவர் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்படி போராடி உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற ஆர்ச்சர், உலகக்கோப்பை தொடரில் கலக்கி வருகிறார்.
இமாலய இலக்கு
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 386 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய வங்கதேச அணி நிதானமாக ஆட்டத்தை துவக்கியது.
பறந்த பந்து
நான்காவது ஓவரின் 2வது பந்தை சந்தித்த சௌம்யா சர்க்கார், ஆர்ச்சரின் 143 கிமீ வேக பந்துவீச்சில் நிலைதடுமாற, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அதன் பின், பந்து எகிறி மேலே பறந்தது. விக்கெட் கீப்பரையும் தாண்டிச் சென்ற பந்து நேராக பவுண்டரி எல்லையை கடந்தது.
பௌலிங்கில் சிக்ஸ்!
பேட்டில் பட்ட பந்துகள் தான் பவுண்டரி தாண்டி பறந்து சென்று சிக்ஸ் ஆகும். ஆனால், விக்கெட் எடுத்த பின், பந்து பறந்து போய் பவுண்டரி எல்லையை தொடுவது மிக அபூர்வமாகவே கிரிக்கெட்டில் நடந்துள்ளது.
|
அதிவேகமான பந்து
இதையடுத்து ரசிகர்கள் ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து சிலாகித்து பேசி வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடரின் மிக அதிவேகமான பந்தை வீசியதும் ஜோப்ரா ஆர்ச்சர் தான். அதிகபட்சமாக 153.05 கிமீ வேகத்தில் பந்து வீசி எதிரணிகளை திணற வைத்துள்ளார்.
சதங்கள்
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 153 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி 386 ரன்கள் எட்ட முக்கிய காரணமாக இருந்தார். வங்கதேசம் 387 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாது என்று தெரிந்தும், நெட் ரன் ரேட்டை காப்பாற்ற முடிவு செய்து ஆடியது. ஷகிப் அல் ஹசன் இந்த தற்காப்பு முயற்சியில் சதம் அடித்து, 121 ரன்களில் ஆட்டமிழந்தார்.