
பேட்டிங்
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் 98 ரன்கள் எடுத்து அசத்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 4 ரன்களுக்கு வெளியேறினார். அதே போல் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா 24 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

மீண்ட இந்தியா
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி 79 பந்துகளில் 66 ரன்களை எடுத்து அவுட்டானார். இது சர்வதேச போட்டிகளில் அவர் அடிக்கும் 62வது அரை சதம் ஆகும். எனினும் அவர் சதமடிக்காதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளித்தது.

அதிரடி இணை
பின்னர் களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட் வழக்கம் போல் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருடன் மறுபக்கத்தில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 5வது சதத்தை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்த நிலையில் கே.எல்.ராகுல் 108 ரன்கள் எடுத்திருந்த போது டாம் கரண் பந்துவீச்சில் அவுட்டார்.

அடங்காத ரிஷப் பண்ட்
ஒரு புறம் விக்கெட்கள் சரிந்தாலும் தனது அட்டகாசத்தை நிறுத்தாத ரிஷப் பண்ட் இங்கிலாந்து பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தார். பின்னர் இவரும் டாம் கரண் பந்துவீச்சிலேயே அவுட்டானார். இவர் 40 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். இதில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா (35), க்ருணால் பாண்டியா (12*) ஆகியோர் ரன் குவிக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

தொடக்கமே அதிரடி
337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். சிறப்பாக ஆடிவந்த ஜேசன் ராய் 55 ரன்களில் ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு இவர்கள் 110 ரன்களை சேர்த்தனர். பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து காட்டடி விளாசினார்.

சிக்ஸர் மழை
இந்திய அணி பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்த பென் ஸ்டோக்ஸ், 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 10 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் ஆட்டத்தால் ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் நகர்ந்தது. மறுமுணையில் பொறுப்பாக ஆடிய பேர்ஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 11வது சதம் இதுவாகும். பின்னர் வந்த வீரர்கள் ரன் சேர்க்க இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 337 என்ற இலக்கை எட்டியது. இதனால் 3போட்டிகள் கொண்ட தொடர் 1 -1 என சமனில் உள்ளது.


Click it and Unblock the Notifications











