
டி20 போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் ஓப்பனிங்கில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்க வேண்டும் என்றும் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் இருக்கும் எனவும் அனைவரும் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 போட்டிகளிலும் கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விமர்சனம்
முதல் டி20 போட்டியில் 4 பந்துகளை சந்தித்த ராகுல் 1 ரன்னை மட்டுமே எடுத்து வெளியேறினார். 2வது போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் டக் அவுட்டாகி அவர் மீண்டும் ஏமாற்றமளித்தார். இதனால் 3வது டி20 போட்டியில் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பதிலடி
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஒரு சிறந்த வீரர் வெறும் 2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனக்கூறி கேள்வி எழுப்பினால், உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணி உருவாகாது. இன்றைக்கு ராகுல் என்றால், நாளை இஷான் கிஷான், நாளை மறுநாள் பண்ட் பிறகு வேறு ஒருவர் என ஒரு நிரந்திரம் இல்லாத அணியாக மாறும் என தெரிவித்துள்ளார்.

ஆட்டம்
28 வயதாகும் கே.எல்.ராகுல் இதுவரை 46 டி20 போட்டிகளில் ஆடி 1,543 ரன்களை எடுத்துள்ளார்.. இதில் 2 சதங்களும், 14 அரை சதங்களும் அடங்கும். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 146.7 ஆகும். ஐபிஎல்-ல் கடந்த சீசன் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் கே.எல்.ராகுல். எனவே இப்படிப்பட்ட வீரர் 2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக உட்கார வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 3வது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications