சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பித்து, ஆட்டத்தை டிரா செய்தது. இந்தப் போட்டியின் கடைசி நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடந்துகொண்ட விதம், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அவர் பென் ஸ்டோக்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடைசி நாள் ஆட்டத்தில், இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயன்றது. ஆனால், இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் தோல்வியைத் தடுத்தனர்.
ஆட்டம் முடிய இன்னும் 15 ஓவர்கள் மீதமிருந்தபோது, ஜடேஜாவும் சுந்தரும் தங்களின் சதத்தை நெருங்கி இருந்தனர். அந்த நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "போட்டி டிராவில் முடியட்டும், ஆட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்" என்று இந்திய அணிக்கு டிரா செய்ய அழைப்பு விடுத்தார். ஆனால், இந்திய அணி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜடேஜாவும், சுந்தரும் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விரும்பினர். இது இங்கிலாந்து வீரர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இந்திய வீரர்களைப் பார்த்து கோபமாகப் பேசத் தொடங்கினர்.

இந்த நிகழ்வு குறித்து, அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கோபமாகப் பேசினார். அவர் கூறியதாவது: "இது என்ன இரட்டை வேடம்? உங்களுக்கு ஜெயிக்க முடியவில்லை என்ற விரக்தியில் இருக்கிறீர்கள். அதற்காக எங்கள் வீரர்கள் ஏன் சதம் அடிக்கக் கூடாது? 'நான் கடுப்பாக இருக்கிறேன், அதனால் நீயும் சந்தோஷமாக இருக்கக் கூடாது, நீயும் அழுதுகொண்டே போ' என்று சொல்வது போல் இருக்கிறது இது. இது எப்படி நியாயம்?" என்று அஸ்வின் கேள்வி எழுப்பினார்.
மேலும், "காலை முதல் கஷ்டப்பட்டு விளையாடி, சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு வீரர் ஏன் விட வேண்டும்? 'சாதாரண பந்துவீச்சாளருக்கு எதிராக சதம் அடிப்பது ஒரு பெரிய விஷயமா?' என்று கேட்கிறார்கள். பந்து வீசுவது உங்கள் அணியினர். யார் பந்து வீசினாலும், சதம் அடிப்பது ஒரு வீரரின் உழைப்பு. அதை ஏன் தடுக்க வேண்டும்? முக்கிய பவுலர்களை பந்து வீச வைக்காமல் மற்றவர்களை வீசவைத்து விட்டு அவர்கள் பந்தில் செஞ்சுரி அடிக்க வேண்டுமா? என பென் ஸ்டோக்ஸ் கேட்கிறார். அது எங்கள் பிரச்சனை அல்ல." என்று ஆவேசமாகப் பேசினார் அஸ்வின்.
"ஒருவேளை நான் கேப்டனாக இருந்திருந்தால், மீதமிருந்த அத்தனை ஓவர்களையும் விளையாடச் சொல்லியிருப்பேன். இந்தப் போட்டி டிரா ஆனது, எங்களுக்குக் கிடைத்த வெற்றி மாதிரிதான்" என்று அஸ்வின் கூறினார்.