
போட்டி
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரின் அட்டகாசமான ஆட்டத்தால் 225 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆரம்பமே இந்திய அணிக்கு வெற்றி முகம் என பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி அதனை மாற்றி அமைத்தது.

பார்ட்னர்ஷிப்
ராயின் விக்கெட்டிற்கு பிறகு ஜோடி சேர்ந்த பட்லர் - டேவிட் மாலன் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இங்கிலாந்து அணி பூஜ்ஜியம் ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்த போது ஜோடி சேர்ந்த இவர்கள் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டனர். அதிரடியாக ஆடிய பட்லர் 34 பந்துகளில் 52 ரன்களும், டேவிட் மாலன் 46 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.

தலைவலி
இருவரும் சேர்ந்து தொடர்ந்து அதிரடி காட்டியதால் ஆட்டம் மெதுவாக இங்கிலாந்து பக்கம் சாய தொடங்கியது. இதனால் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி கேப்டன் கோலி, டெப்த் ஓவரில் பந்துவீச வேண்டிய புவனேஷ்வர் குமாரை முன்கூட்டியே 13 ஓவரை வீச அழைத்தார். இந்த ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அந்த ஓவரில் புவனேஷ் வீசிய பந்தை, பட்லர் லாங் ஆஃப் திசையில் துக்கி அடிக்க ஹர்த்திக் பாண்டியா லாவகமாக பிடித்தார்.
வார்த்தை போர்
இதனையடுத்து பட்லர் பெவிலியன் திரும்பிய போது கோலி உற்சாகத்தில் ஏதோ செய்ய, அது பட்லருக்கும் - கோலிக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் விராட் கோலி ஆவேசமாக பேசிக்கொண்டு பட்லரை நோக்கி சென்றதால் போட்டியில் பதற்றம் ஏற்பட்டது. எனினும் கள நடுவர் நிதின் மேனன் அங்கு சென்று இருவரையும் பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications