
டாஸ் முடிவு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அறிமுகம்
முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில், ஹர்த்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியாவுக்கும், பிரஷித் கிருஷ்ணாவுக்கும் முதல் முறையாக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளரான பிரஷீத் கிருஷ்ணா சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்களை எடுத்தார். அதே போல க்ருணால் பாண்டியாவும் விஜய் ஹசாரே தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்தை விளாசினார். இதன் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மனம் உருகிய க்ருணால்
இவர்கள் இருவருக்கும் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் கேப் வழங்கப்பட்டது. இதில் க்ருணால் பாண்டியாவுக்கு அவரின் இளைய சகோதரர் ஹர்த்திக் பாண்டியா வழங்கினார். அப்போது மிகவும் உருக்கமான க்ருணால், தனது தம்பியை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். அதே போல மறைந்த அவரின் தந்தைக்கு கேப்பின் மூலம் மரியாதை செலுத்தினார். சகோதரர்கள் இருவரும் கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்துக்கொண்டது அருகில் இருந்த இந்திய வீரர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

பாண்டியா சகோதரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக சேர்ந்து ஆடிய ஹர்த்திக் மற்றும் க்ருணால் பாண்டியா தற்போது ஒரு நாள் போட்டியில் சேர்ந்து ஆடுகின்றனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சகோதரர்கள் இணைந்து ஆடுகின்றனர். இதற்கு முன்னர் கடந்த 2012ம் ஆண்டு இர்ஃபான் மற்றும் யூசஃப் பதான் சகோதரர்கள் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடினார்கள்.


Click it and Unblock the Notifications











