
சிறப்பான தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

ராய் அதிரடி
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நல்ல தொடக்கம் அளித்தார். ஆனால் அவருக்கு பார்ட்னர்ஷிப் அமையாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக போனது. தொடக்க வீரர் பட்லர் 9 ரன்களும், மாலன் 14, பேர்ஸ்டோ 25 ரன்களும் எடுத்து வெளியேறினர். தனி ஆளாக தொடக்கத்தில் இருந்து போராடிய ராய், 27 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

விலகல்
பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோக்ஸின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி எளிதாக வென்றுவிடும் என்று சென்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 17வது ஓவரில் கேப்டன் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறினார். பவுண்டரி சென்ற பந்தை தடுக்கும்போது கோலிக்கு சிறிது காயம் ஏற்பட்டதாம். இதனால் தொடர்ந்து ஆடினால் காயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக அவர் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மா தலைமை தாங்கினார்.

ரோகி சர்மா
விராட்கோலி வெளியேறிய போது இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு அப்போது அந்த 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது ஆட்டத்தின் போக்கை மாற்ற 17 ஓவரை வீச ஷர்துல் தாகூரை ரோகித் அழைத்தார். அவரும் அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு திருப்புமுனையை கொடுத்தார். பின்னர் இறுதியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

வம்பிழுக்கும் வாகன்
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், 4வது டி20 போட்டியில் கோலி சிறந்த கேப்டன்சி செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில்மட்டும் ரோகித் சர்மாவிடம் அணியை ஒப்படைத்து விட்டு நல்ல யுக்தி மேற்கொண்டுள்ளார் என கிண்டல் அடித்துள்ளார். ஏற்கனவே டி20 அணியை ரோகித் சர்மாவின் கோலி ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வரும் நிலையில் மைக்கேல் வாகனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











