லண்டன்; இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஜேக்கப் பெத்தேல் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் களமிறங்கியபோது, அவருடைய வயது 21 ஆண்டுகள் மற்றும் 329 நாட்கள் ஆகும்.
இந்தச் சாதனையின் மூலம், ஜேக்கப் பெத்தேல் 136 ஆண்டுகள் பழமையான ஒரு சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், 1889 ஆம் ஆண்டு, மான்டி பவுடன் தனது 23 வயது மற்றும் 144 நாட்களில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியதே சாதனையாக இருந்தது. தற்போது, பெத்தேல் அந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்து, புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே டாஸ் வென்ற பெத்தேல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஹாரி டெக்டர் (61*) மற்றும் லோர்கன் டக்கர் (55) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
சவாலான இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு, தொடக்க வீரர் பில் சால்ட் மீண்டும் ஒருமுறை தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 46 பந்துகளைச் சந்தித்த அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் விளாசி, இங்கிலாந்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 141* ரன்கள் குவித்த சால்ட், தனது அதிரடி ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார்.
ஜோஸ் பட்லர் (10 பந்துகளில் 28), கேப்டன் பெத்தேல் (24) ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 14 பந்துகள் மீதமிருக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஜேக்கப் பெத்தேல் கேப்டனாக தனது பயணத்தை ஒரு வெற்றியுடன் தொடங்கியுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.