ஆன்டிகுவா : இங்கிலாந்து - நமீபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் மழை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை அணியின் சூப்பர் 8 கனவு மொத்தமாக முடிவுக்கு வந்தது. அதேபோல் அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் போது, நமீபியா அணியை எதிர்த்து விளையாட இருந்தது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை பெய்யாத போதும் பிட்சில் தார்பாய் வைத்து மூடப்பட்டிருந்தது.
10 மணியளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கிய நிலையில், வர்ணனையாளர்கள் குடையுடன் பேச தொடங்கினர். தீவிர மழை பெய்ய தொடங்கியதால், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே போட்டி கைவிடப்பட்டால், இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் சூழல் ஏற்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏனென்றால் ஸ்காட்லாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, ஓமன் அணியை அபாரமாக வீழ்த்தியது. இதனால் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் உள்ளது.
மறுபக்கம் ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் நமீபியா - இங்கிலாந்து இடையிலான போட்டி கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி முன்னேறும் நிலை உள்ளது. இதனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.