சௌதாம்டன் : இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், 8 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தும், 55 ரன்களுக்கு 5 விக்கெட்களையும் இழந்தும் இருந்தது.
இங்கிலாந்து அணி அந்த பெரிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து ரன் மழை பொழிந்ததோடு, நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.

இரண்டாவது போட்டி : நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
விக்கெட் வீழ்ச்சி : இந்தப் போட்டி மழை காரணமாக 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் பின் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த சரிவில் மீளுமா? என எதிர்பார்த்த நிலையில், 12.1 ஓவரில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். பட்லர் 30 ரன்கள் மட்டும் எடுத்தார்.
லிவிங்க்ஸ்டன் அபாரம் : இனி அந்த அணி தேறுவது கடினம் என நினைத்த போது மொயீன் அலியுடன் ஜோடி சேர்ந்தார் லியாம் லிவிங்க்ஸ்டன். இருவரும் கூட்டு சேர்ந்து 51 ரன்கள் சேர்த்தனர். மொயீன் அலி 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம் கர்ரன் உடன் ஜோடி சேர்ந்த லிவிங்க்ஸ்டன் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். கர்ரன் 42 ரன்கள் சேர்த்து வெளியேறினார். லிவிங்க்ஸ்டன் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 34 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து பேட்டிங் : 34 ஓவர்களில் 227 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் கான்வே 14, வில் யங் 33, டாரில் மிட்செல் 57, டாம் லாதம் 19 ரன்கள் எடுத்தனர். இவர்கள் மட்டுமே இரட்டை இலக்கில் ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து வெற்றி : நியூசிலாந்து அணி 26.5 ஓவரிலேயே 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்த நிலையில், இந்தப் போட்டியில் வென்று இங்கிலாந்து தொடரை சமநிலையில் கொண்டு சென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் முடிவில் தொடர் யாருக்கு என தெரியும்.