ENG vs NZ: மீண்டும் மீண்டுமா? 3வது டெஸ்ட்டில் சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ்..சாதனையும் படைத்தார்
நாட்டிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது மிட்செல் சாண்ட்னரின் wristband-ஐ தொட்ட விவகாரத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐசிசி (ICC) ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு ஆளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் நிகழ்ந்த இந்த ஆட்டமிழப்பின் மூலம் ஸ்டோக்ஸ் தனது 250-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
போட்டியின் போது டேரில் மிட்செல் மற்றும் வில் ஓ'ரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே வீழ்த்தியிருந்த நிலையில், சாண்ட்னர் அவரது மூன்றாவது விக்கெட்டாக மாறினார். ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட்-பிட்ச் பந்திலிருந்து தப்பிக்க முயன்ற சாண்ட்னர், பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்.

சர்ச்சைக்குரிய விக்கெட் வீழ்த்தப்பட்ட விதம்
பந்து அவரது கிளவுஸில் பட்டு எழும்பிய போது, கல்லி திசையில் நின்ற ஜேக்கப் பெத்தேல் அதை மிக எளிதாகக் கேட்ச் பிடித்தார். கள நடுவர் உடனடியாக அவுட் கொடுத்த போதிலும், சாண்ட்னர் அதற்கு மேல்முறையீடு (DRS) செய்தார்.
மறுஒளிபரப்பில் பந்து சாண்ட்னரின் கிளவுஸில் உள்ள மணிக்கட்டுப் பட்டையின் மேல் பகுதியில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஐசிசி விதிகளின்படி, கிளவுஸின் மணிக்கட்டுப் பட்டை பேட்டின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. ஆனால், பந்து தனது கிளவுஸில் படவில்லை என்று சாண்ட்னர் வாதிட்டார்.
வீடியோ பதிவுகளை விரிவாக ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், கள நடுவரின் சாண்ட்னர் அவுட் என்ற முடிவை உறுதி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 250-வது விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றி சாதனை படைத்தார்.
ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம்
மூன்றாவது நடுவர் விக்கெட்டை மறுபரிசீலனை செய்து கொண்டிருந்த போது, சாண்ட்னருக்கும் ஸ்டோக்ஸுக்கும் இடையே சில வார்த்தைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. பந்து தனது கை பாதுகாப்புக் கவசத்தில் (Arm Guard) பட்டதாக சாண்ட்னர் வாதிட, அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்டோக்ஸ் அவரது கிளவுஸின் மணிக்கட்டுப் பகுதியைத் தட்டி பந்து அங்குதான் பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
இந்தச் செய்கை தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி நடத்தை விதிகளின்படி, சக வீரரிடமோ அல்லது நடுவர்களிடமோ 'தேவையற்ற உடல் ரீதியான தொடர்பை' (inappropriate physical contact) ஏற்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, போட்டி அதிகாரிகள் ஸ்டோக்ஸின் இந்தச் செயலை ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.
ஐசிசி விதிகளின்படி, இந்தத் தொடர்பு திட்டமிட்டு செய்யப்பட்டதா, தற்செயலாக நடந்ததா, வேண்டும் என்றே செய்யப்பட்டதா போன்ற விவரங்கள் ஆராயப்படும். ஸ்டோக்ஸின் செயல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதம் அல்லது டிமெரிட் புள்ளி (demerit point) வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இரவு விடுதிக்கு சென்ற விவகாரத்தில், 2வது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடாமல் தடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

