அகமதாபாத் : நியூசிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தன் 2023 உலகக்கோப்பை பயணத்தை தொடங்கி இருக்கிறது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணி செய்த முதல் முக்கிய தவறே எந்த சூழ்நிலையில் ஆடுகிறோம், எந்த நாட்டில் ஆடுகிறோம் என புரிந்து கொள்ளாமல் முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆடுவோம் என திட்டமிட்டதுதான். இந்த கண்மூடித்தனமான அடித்து ஆடும் திட்டத்துக்கு bazball என ஒரு பெயரும் உண்டு.
அவர்களின் அந்த "Bazball" திட்டத்தால் எல்லாமே சொதப்பி மோசமாக தோல்வி அடைந்துள்ளது அந்த அணி. இத்தனைக்கும் இந்த உலகக்கோப்பையில் ஆடும் அணிகளிலேயே வலுவான அணி இங்கிலாந்து தான்.
பேட்டிங்கில் சொதப்பினாலும் நியூசிலாந்து அணியின் 4 - 5 விக்கெட்களை கூட வீழ்த்த முடியாமல் போனது இன்னும் மோசம், எப்படி அவர்களின் ஒரே ஒரு திட்டம் மொத்த போட்டியையும் காலி செய்தது என பார்ப்போம்.

பிட்ச்சை புரிந்து கொள்ளவில்லை : இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 282 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய ஒத்துழைத்தது. ஆனால் அதே சமயம் ஸ்பின் பந்துகளுக்கும் ஒத்துழைத்தது. அங்கே தான் சிக்கிக் கொண்டது இங்கிலாந்து அணி. பிட்ச்சை புரிந்து கொள்ளாமல் அனைத்து வீரர்களும் அடித்து ஆடவே ஆசைப்பட்டார்கள். அதனால் விக்கெட்களை விரைவாக இழந்தார்கள்.
அடித்து ஆடுவோம் : இங்கிலாந்து அணி சில ஆண்டுகளாகவே முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை, முதல் பேட்ஸ்மேனில் இருந்து கடைசி பேட்ஸ்மேன் வரை பவுண்டரியாக அடித்து தான் ஆடுவோம் என bazball என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அது இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் வேலை செய்யலாம். ஆனால், இந்திய ஆடுகளத்தில் அது வேலை செய்யவில்லை.
உதாரணம் : இதற்கு நல்ல உதாரணம் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட். அவர் இந்த bazball திட்டமெல்லாம் வரும் முன்பிருந்தே அணியில் இருப்பவர். அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு மிடில் ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடினார். அதனால் 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். அவரைப் போல மிடில் ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடி விட்டு கடைசி 10 ஓவர்களில் பவுண்டரி மூலம் ரன் குவிக்க முயற்சித்து இருந்தால் அந்த அணி
300 ரன்களை கடந்திருக்கும்.
வேலை செய்யாத பவுலிங் : இங்கிலாந்து அணி தாங்கள் அதிரடி ஆட்டம் ஆடுவதால் எப்படியும் 300, 350 ரன்களைதான் ஒவ்வொரு போட்டியிலும் அடிப்போம். அதனால், அதை தடுக்கும் வகையிலான பவுலிங் தான் வேண்டும் என கண் மூடித்தனமாக முடிவு செய்து வேகப் பந்துவீச்சாளர்களையே அணியில் அதிகம் வைத்துள்ளது. அதிலும் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் என்றால் விரல் விட்டுத் தான் எண்ண வேண்டும். காரணம், எல்லா வீரர்களும் ரன் குவித்தே ஆக வேண்டும் என்பதால் எல்லோருமே கிட்டத்தட்ட ஆல்- ரவுண்டர்கள் தான்.
ஆல் - ரவுண்டர்கள் மட்டுமே : இந்தப் போட்டியில் பந்து வீசியவர்களில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட், சுழற் பந்துவீச்சாளர் அதில் ரஷித் என இருவர் மட்டுமே முழு நேர பந்துவீச்சாளர்கள் என்ற அடையாளத்துக்குள் அடங்குவார்கள். கிறிஸ் வோக்ஸ் நல்ல பந்துவீச்சாளர்தான். ஆனால், ஸ்விங் ஆனால் மட்டுமே அவரது பந்துவீச்சு எடுபடும். சாம் கரன், மொயீன் அலி, லியாம் லிவிங்க்ஸ்டன் என மற்ற அனைவருமே ஆல் - ரவுண்டர்கள் தான். நிபுணத்துவம் இல்லாத பந்துவீச்சாளர்களால் அனைத்து பிட்ச்களிலும் விக்கெட் வீழ்த்த முடியாது என்பதையே இந்தப் போட்டி காட்டி இருக்கிறது.