சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் கடினமான கேட்ச் ஒன்றை பிடித்து வியக்க வைத்தார். அந்தப் போட்டியில் முதல் திருப்பு முனையாக அந்த கேட்ச் அமைந்தது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இரு அணிகளும் மோதின.

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தை அடிக்க முயன்றார் பேர்ஸ்டோ. ஆனால், பந்து சரியாக பேட்டில் படவில்லை.

அப்போது பறந்து சென்ற அந்த பந்தை எகிறி ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்தார் மிட்செல் சான்ட்னர். இங்கிலாந்து அணி அப்போது தன் முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின் தொடர்ந்து விக்கெட்களை இழந்து 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இந்த விக்கெட் வீழ்ச்சிக்கு சான்ட்னர் தன் அபாரமான பீல்டிங்கால் பிடித்த அந்த கேட்ச் காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதலில் சறுக்கினாலும், பின் மழை காரணமாக 34 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் 226 ரன்கள் குவித்தது. அடுத்து அதை துரத்திய நியூசிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.