அகமதாபாத் : நான்கு முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், நியூசிலாந்து அணி, இங்கிலாந்தை சம்மட்டி அடி அடித்து வெற்றி பெற்றுள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சில சர்ச்சைக்குரிய சம்பவங்களால் தான் இங்கிலாந்து அணி வென்றது என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

அப்போது நியூசிலாந்து அணி போராடி சூப்பர் ஓவர் வரை வந்து தோல்வி அடைந்த நிலையில், எப்போதுமே மனம் தளராத கேன் வில்லியம்சன் அன்று கண்ணீர் விட்டார். அந்த கண்ணீருக்கு அவர் இல்லாத நிலையிலும் அடுத்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து இளம் வீரர்கள் பழி தீர்த்துள்ளனர்.
என்ன நடந்தது? : 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகாமல் இருக்க ஓடிய பென் ஸ்டோக்ஸ் பேட்டை வைத்து பந்தை தடுக்க, அந்த பந்து பவுண்டரி சென்றது. அதனால் கூடுதலாக நான்கு ரன்களை பெற்றது இங்கிலாந்து அணி. உண்மையில் பீல்டிங்கை தடுத்தார் என அதற்கு இங்கிலாந்து அணிக்கு தான் பெனால்டி கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், எப்படியோ அது இயல்பாக நடந்தது என அம்பயர் கூறி விடவே போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது.
கேன் வில்லியம்சன் கண்ணீர் : அந்த தொடரிலேயே சிறந்த கேப்டனாக வலம் வந்த கேன் வில்லியம்சன் தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பல ரசிகர்கள் இங்கிலாந்து அணி தவறான முறையில் வென்றது என கூறினர். ஆனால், விளையாட்டின் கண்ணியம் காத்த வில்லியம்சன் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி பேசவில்லை.
மீண்டும் உலகக்கோப்பை சந்திப்பு : இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின் எங்கே விட்டார்களோ அங்கே இருந்தே தொடங்கும் வகையில் நியூசிலாந்து அணியில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், பெர்குசன், ப்ரேஸ்வெல், டிம் சவுத்தி ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
பழிதீர்த்த இளம் வீரர்கள் : அந்த நான்கு அனுபவ வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களே அணியில் ஆடினர். சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து அணியை 282 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டது. அடுத்து 36.2 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
கேன் வில்லியம்சனுக்கு கிடைத்த வெற்றி : ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. கான்வே, ரச்சின் ரவீந்திரா என இரண்டு இளம் வீரர்கள் மட்டுமே ரன் குவித்து இங்கிலாந்து நிர்ணயித்த 283 வெற்றி இலக்கை எட்டினர். இந்த வெற்றி கேன் வில்லியம்சனுக்கு கிடைத்தது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்