ஆன்டிகுவா : 150 கிமீ வேகத்தை எதிர்கொள்வது முதல்முறை என்பதால் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்று ஓமன் அணியின் கேப்டன் இலியாஸ் தெரிவித்துள்ளார்.
ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் மற்றும் 101 பந்துகள் மீதம் வைத்து வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஓமன் அணி 13.2 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியின் ஆடில் ரஷீத் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து வெற்றிபெற்றது. ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட்டாகியதால், ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் உற்சாகமடைந்தனர். ஏனென்றால் நீண்ட நாட்களாக 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய அணி என்ற மோசமான சாதனையுடன் ஆர்சிபி அணி இருந்து வருகிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து ஓமன் அணி கேப்டன் இலியாஸ் பேசுகையில், எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நல்ல இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என்றால், பவுலர்களால் எதுவும் செய்ய முடியாது,. அதேபோல் நாங்கள் 130 முதல் 140 கிமீ வேகத்தில் வீசக் கூடிய பவுலர்களை தான் எதிர்கொண்டிருக்கிறோம்.
ஆனால் முதல்முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் 150 கிமீ வேகத்தில் வீசக் கூடிய பவுலர்களை சந்திக்கிறோம். நிச்சயம் இது மிகப்பெரிய வித்தியாசத்தை அளிக்கக் கூடியது. கடந்த சில போட்டிகளாகவே பேட்ஸ்மேன்களால் ரன்கள் சேர்க்க முடியாததால் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். தவறான ஷாட் தேர்வு மற்றும் சரியான லெந்தில் வீசப்படும் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுக்கிறோம்.
இந்த தொடரில் எங்கள் பவுலர்களை எந்த வகையிலும் விமர்சிக்கவோ, குற்றம் சுமத்தவோ முடியாது. ஏனென்றால் நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கடைசி போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.