ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெறுகிறது
கொரோனா வைரஸ் காரணமாக 117 நாட்கள் முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து -பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தின் ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கியுள்ளது.
முதல் இன்னிங்சில் 326 ரன்கள்
கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தான் அணியினர், குவாரன்டைன், பயிற்சிகள் என தங்களை பிசியாக வைத்துக் கொண்டனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சை 326 ரன்களுடன் முடித்துக் கொண்டுள்ளது.
ஏமாற்றம் அளித்த பாபர் அசாம்
இந்த போட்டியில் கேப்டன் அசார் அலி டக் அவுட் ஆன நிலையில் களமிறங்கிய பாபர் அசாம், அதிரடியாக விளையாடி முதல் நாள் இறுதியில் 69 ரன்களை அடித்திருந்தார். அவர் தொடர்ச்சியான தனது 5வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளின் துவக்கத்திலேயே அவர் அவுட் ஆனார்.
156 ரன்கள் அடித்து அதிரடி
ஆனால் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷா மசூத், அதிரடியாக ஆடி 156 ரன்களை குவித்து பாகிஸ்தானின் முதல் இன்னிங்சில் அணியின் வலிமையை உறுதி செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 6வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் சதமடித்துள்ளார்.
4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள்
முதல் இன்னிங்சில் 326 ரன்களுடன் பாகிஸ்தான் வலிமையாக உள்ள நிலையில், களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அணியின் அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆன நிலையில், அடுத்தடுத்த வீரர்களும் ஏமாற்றத்தையே அளித்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களை எடுத்துள்ளது.