மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளை பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவி தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது.
இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த தொடரில் வெற்றி பெற்று இழந்த மானத்தை மீட்க வேண்டிய பொறுப்பில் பாகிஸ்தான் அணி இருக்கின்றது.

இந்த சூழலில் முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் நான்கு ரன்கள் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷான் மசூத் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் சதம் அடித்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர், 177 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார். அதே போன்று தொடக்க வீரரான 24 வயதான அப்துல்லா ஷபிக் 102 ரன்கள் குவித்தார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் களத்திற்கு வந்தார். கடந்த 16 இன்னிங்ஸ்களாக பாபர் அசாம், ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனால் பாபர் அசாம், இந்த டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் கொஞ்சம் நல்ல ஷார்ட்டுகளை பாபர் அசாம் ஆடினாலும், 71 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் 17 இன்னிங்ஸ்களாக அவர் அரைசதம் அடிக்க வில்லை. இதனை அடுத்து சவுத் சக்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் மேல் குவித்தால் மட்டுமே ஓரளவுக்கு இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்த முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.