டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்தில் துவங்கியது.
டாஸ் வெற்றி
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் குறைந்தது 400 ரன்கள் எடுத்தால் போட்டியில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
ஷான் மசூத் அவுட்
முதல் போட்டியில் சதம் அடித்த ஷான் மசூத் இந்தப் போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து துவக்க வீரர் அபித் அலி, கேப்டன் அசார் அலி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.
விக்கெட் வீழ்ச்சி
அசார் அலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் ஆசாம் - அபித் அலி ஜோடி சேர்ந்தனர். அபித் அலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆசாத் ஷபிக் 5, பாவாத் ஆலம் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் நிலை
பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 126 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது பாபர் ஆசாம் 25, முகமது ரிஸ்வான் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பாபர் ஆசாம்
5 விக்கெட் இழந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி 250 - 300 ரன்களை தாண்டுவதே கடினம் என கருதப்படுகிறது. அதுவும் கூட பாபர் ஆசாம் பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே சாத்தியம். ரிஸ்வான், யாசிர் ஷா ஓரளவு பேட்டிங் செய்து அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
ஒரே வாய்ப்பு
அவர்கள் இருவரின் விக்கெட் வீழ்வதற்குள் பாபர் ஆசாம் பெரிய அளவில் ரன் குவிப்பது மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு இப்போது உள்ள வாய்ப்பு. இங்கிலாந்து அணி முதல் நாளில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டது. இன்னும் சில ஓவர்கள் கிடைத்திருந்தால் பாகிஸ்தான் அணி ஆல் - அவுட் ஆகி இருக்கவும் வாய்ப்பு இருந்தது.
இங்கிலாந்து தொடரை கைப்பற்றும்
மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு திட்டமிட ஒருநாள் கிடைத்துள்ளது. பாபர் ஆசாம் கை கொடுத்தால் பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் ரன் குவிக்கலாம். இங்கிலாந்து இந்தப் போட்டியில் வென்றாலே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.