
மூன்றாவது டெஸ்ட்
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்யவாவது முடியும் என்ற நிலையில் உள்ளது பாகிஸ்தான்.

மோசமான துவக்கம்
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் பர்ன்ஸ் 6, ஸிப்லி 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். மூன்றவதாக களமிறங்கினார் இளம் வீரர் ஸாக் கிரவ்லி. அவருடன் கேப்டன் ஜோ ரூட் இணைந்து ஆடினார்.

ஜோ ரூட் ஏமாற்றம்
ஜோ ரூட் 29 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 3 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. இந்த மோசமான நிலையில் ஜோஸ் பட்லர் - கிரவ்லி இணைந்தனர்.

அசத்தல் ஆட்டம்
இருவரும் ரன் குவிக்கும் வேகம் குறையாமல் ஆடினர். ஸாக் கிரவ்லி தன் முதல் டெஸ்ட் சதம் அடித்து தொடர்ந்து ஆடினார். பட்லரும் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

205 ரன்கள்
கிரவ்லி - பட்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்து தொடர்ந்து களத்தில் உள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்துள்ளது. கிரவ்லி 171, பட்லர் 87 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இரட்டை சதம்?
கிரவ்லி இரட்டை சதமும், பட்லர் சதமும் அடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை வீழ்த்தாவிட்டால் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது கடினமே.

சோகத்தை தீர்த்த கிரவ்லி
தன் முதல் டெஸ்ட் சதம் அடித்த ஸாக் கிரவ்லி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற சோகத்தை தீர்த்து வைத்தார். மேலும் முதல் தர போட்டிகளில் இது கிரவ்லியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.


Click it and Unblock the Notifications











