பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி முடித்து, அடுத்ததாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
டாஸ் முடிவு
இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் மழையால் பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்தது. அதை கணித்த பாகிஸ்தான் அணி டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்கள் முடிவு சரிதான் என்பது போல, இங்கிலாந்து அணி முதல் 5 ஓவர்களில் ரன் குவிக்க திணறியது.
இங்கிலாந்து தடுமாற்றம்
துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு துவக்க வீரர் டாம் பான்டன் - மலன் இணைந்து நிதானமாக ரன் சேர்த்து வந்தனர். 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 25 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
பான்டன் அதிரடி
அதன் பின் பான்டன் அதிரடியை துவக்கினார். மலன் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். டாம் பான்டன் 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்து 12.3 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த வண்ணம் இருந்தனர்.
மழை குறுக்கிட்டது
இயான் மார்கன் 14, மொயீன் அலி 8, கிரிகோரி 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் வீழ்ந்தாலும் பான்டன் அதிரடியால் இங்கிலாந்து அணி ஓவருக்கு 8 ரன்கள் என்ற ரன் ரேட்டிலேயே இருந்தது. 16.1 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது.
போட்டி நிறுத்தம்
அதன் பின் மழை நிற்காத நிலையில் போட்டியை கைவிட முடிவு செய்தனர் அம்பயர்கள். இங்கிலாந்து அணி 16.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து இருந்தது. எப்படியும் 160 ரன்களை இங்கிலாந்து அணி எட்டி இருக்க வாய்ப்பு இருந்தது.
தப்பித்த பாகிஸ்தான்
பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணியால் 160 ரன்களை சேஸ் செய்வது அத்தனை எளிதல்ல. அந்த வகையில் பாகிஸ்தான் அணி மழையால் தப்பித்தது. ஏற்கனவே, டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் டிரா ஆன நிலையில், டி20 போட்டி ஒன்றும் மழையால் கைவிடப்பட்டு இருப்பது ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.