முல்தான் : வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதை அடுத்து தற்போது இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் பாகிஸ்தான் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த சூழலில் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பெற்று ரசிகர்களின் மரியாதையை மீட்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறிய நிலையில், இன்றைய போட்டியில் அபாரமாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர்.
பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப் நான்கு ரன்களில் வெளியேறினாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷபிக் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர். குறிப்பாக கேப்டன் ஷான் மசூத் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து வீரர்கள் பந்துவீச்சை லாவகமாக எதிர் கொண்டு அவர் ரன் அடிக்க பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். கிட்டத்தட்ட ஒரு நாள் கிரிக்கெட் போல் பாகிஸ்தான் வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் ரன் சேர்ப்பதைக் கண்டு நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த சூழலில் கேப்டன் ஷான் மசூத் 102 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டர்களும்,இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
பாகிஸ்தான் கேப்டனாக முதல் சதத்தை ஷான் மசூத் பூர்த்தி செய்தார். அது மட்டுமல்லாமல் 1524 நாட்களுக்குப் பிறகு ஷான் மசூத் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷான் மசூத் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் 46 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியில் அனுபவம் குறைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை.