நீங்கதான் அட்டாகிங் சாம்பியன்ஸா.. ஒருநாள் கிரிக்கெட்டை மறந்த இங்கிலாந்து.. நசுக்கிய தென்னாப்பிரிக்கா
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இங்கிலாந்து களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் பட்லரின் அந்த முடிவு இங்கிலாந்து அணிக்கு பிரச்சனையை கொடுத்தது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிரடி வீரர் கிளாஸன் 109 ரன்களும், யான்சன் 75 ரன்களும், வான் டர் டஸன் 85 ரன்களும் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ் - மலான் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து பேர்ஸ்டோவ் தொடங்க, இரண்டாவது ஓவரில் மலான் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் பரபரப்பான சேஸிங் இருப்பதாக நினைத்து ரசிகர்கள் நிமிர்ந்தனர். ஆனால் 3வது ஓவரிலேயே பேர்ஸ்டோவ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 4வது ஓவரில் ஜோ ரூட் 2 ரன்களில் வெளியேறினார். என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அணி மலானை 6 ரன்களில் வீழ்த்தி அனுப்பி வைத்தது.
இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்டோக்ஸ் - ப்ரூக் கூட்டணி இணைந்தது. இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியை மீட்பார்கள் என்று நினைத்து முடிப்பதற்குள் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அப்போதும் இங்கிலாந்து அணி ப்ரூக் அட்டாக்கிங் கிரிக்கெட்டையே வெளிப்படுத்தினார்.
இவருடன் இணைந்து பட்லரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது. இதன்பின் அட்டாக் செய்ய நினைத்த பட்லர் 15 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 17 ரன்களிலும் ஒரே ஓவரில் கொயட்சே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த ரஷீத் 10 ரன்களிலும், டேவிட் வில்லி 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 100 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அதன்பின் அட்கின்சன் - மார்க் வுட் இணைந்து அதிரடியாக 70 ரன்களை சேர்த்தனர்.
ஆனால் மஹாராஜ் வீசிய பந்தில் அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டாப்லீ காயம் காரணமாக களமிறங்காததால், இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் கொயட்சே 3 விக்கெட்டுகளையும், இங்கிடி, மார்கோ யான்சன் ஆகியோ தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் 3வது தோல்வியை பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications