மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்துள்ள தோல்வியை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 109 ரன்களும், வான் டர் டஸன் 85 ரன்களும், யான்சன் 75 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் கொயட்சே 3 விக்கெட்டுகளையும், இங்கிடி மற்றும் யான்சன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதுவாக அமைந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததே சாதனையாக இருந்தது.
இந்த சாதனை தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேசுகையில், இந்த போட்டியில் அடைந்த தோல்வி சொல்ல முடியாத அளவிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனென்றால் மோசமாக அடி வாங்கி இருக்கிறோம். எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்காக களமிறங்கினோம். ஆனால் பவுலிங்கின் போது எங்களின் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. டாப்லி திடீரென காயமடைந்தார். ஆனாலும் வீரர்கள் அனைவரும் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
எங்களால் அவர்களை 340 முதல் 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் நிச்சயம் மிகச்சிறந்த போட்டியாக இருந்திருக்கும். அதேபோல் எதிர்பார்த்தை விடவும் அதிக வெயில் இருந்தது சவாலாக அமைந்தது. சிறப்பாக சேஸிங்கை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இரு விக்கெட்டுகள் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இந்த தோல்வி காரணமாக இனி சிறிய தவறு கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனி விளையாடும் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.