லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஜோ ரூட், ஜாஸ் பட்லர் என இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் அரைசதம் அடித்துப் போராடியும், இறுதியில் வெற்றி தென்னாப்பிரிக்கா வசமானது. 1998-க்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வெல்வது இதுவே முதல் முறையாகும்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணியில், இளம் வீரர் மாத்யூ பிரீட்ஸ்கே மீண்டும் ஒருமுறை தனது அபாரமான ஃபார்மை வெளிப்படுத்தினார். 77 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய அவர், தனது முதல் 5 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

அவருடன் ஸ்டப்ஸ், டிவால்ட் பிரெவிஸ் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். ஸ்டப்ஸ் 58 ரன்களும், டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.
331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஜோ ரூட் (61 ரன்கள்), ஜேக்கப் பெத்தெல் (58 ரன்கள்), கேப்டன் ஜாஸ் பட்லர் (61 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றியது.
ஆனால், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள், குறிப்பாக நந்த்ரே பர்கர், முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பர்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதை அடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளில் முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது தென்னாப்பிரிக்க அணி.
இந்த வரலாற்று வெற்றி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, "இந்த வெற்றி மிகவும் பெருமையளிக்கிறது. மாத்யூ பிரீட்ஸ்கே தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்கிறார். கேசவ் மஹராஜ் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்" என்று கூறினார். இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 7-ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ளது.