கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்று இருக்கும் நிலையில், இதில் குரூப் சுற்றில்
இங்கிலாந்து அணி எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. மற்ற அணிகள் குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற்று இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்த முறை சாம்பியன்ஸ் தொடரில் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக விளையாடின. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றன. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், அந்த இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பெற்று உள்ளன. மறுபுறம் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா ஐந்து புள்ளிகளையும், ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளையும், ஆப்கானிஸ்தான் மூன்று புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இங்கிலாந்து அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒரு புள்ளி கூட பெறாமல் உள்ளது. கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணி 29.1 ஓவரில் எல்லாம் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. அதனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு வெற்றி பெறாமலேயே புள்ளிகள் கிடைத்தன. இங்கிலாந்துக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை. இங்கிலாந்து விளையாடிய எந்த போட்டியிலும் மழை குறுக்கிடவில்லை.
எனவே, இங்கிலாந்து அணி தனது திறமையின் மூலம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று இருக்க வேண்டும். அதையும் அந்த அணி செய்யவில்லை. எனவே, இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது இங்கிலாந்து. பாகிஸ்தான் அணி மழையின் தயவால் ஒரு புள்ளி பெற்று ஏழாவது இடத்தை பிடித்தது.
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை விட குறைவான நெட் ரன் ரேட் வைத்திருப்பதால், ஒரு புள்ளியுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் ஒரு புள்ளியுடன் ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மூன்று புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இன்னும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் சுற்றுப்போட்டி மீதம் இருப்பதால், அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் பிடித்துள்ளன என்பது தெரியவரும். எனினும் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. ஆனால், அவை எந்த இடங்களை பெறும் என்பது மட்டுமே இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.