கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் மோதப் போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்த நிலையில் மார்ச் 4 அன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய அணியுடன் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒரு அணி விளையாடும்.
மார்ச் 4 அன்று நடைபெற உள்ள முதல் அரை இறுதிப் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடும். இந்தியா குரூப் ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தை பெறும் என்பதை பொறுத்தே அரையிறுதியில் எந்த அணியுடன் விளையாடும் என தெரிய வரும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியின் முடிவில் இந்தியா புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தை பெறும் என தெரியும். தற்போது குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

தற்போது குரூப் பி பிரிவின் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டி கைவிடப்பட்டதை அடுத்து ஐந்து புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே மற்றும் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டதை அடுத்து நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இடம் பிடித்து உள்ளது.
குரூப் ஏ பிரிவில் தற்போது நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒரு போட்டி மீதம் உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
அதன்படி இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். அப்படி நடந்தால் இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தால் அரையிறுதியில் குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும்.