கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. குரூப் பி பிரிவில் இது கடைசி ஆட்டமாகும். பி பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் இருக்கின்றது.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்க அணியின் ரன் ரேட் மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ரன் ரேட் ஆப்கானிஸ்தான் அணியை விட குறைவாக செல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
இதுதான் அவருக்கு கேப்டனாக கடைசி போட்டியாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாஸ் பட்லர், முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிற்பகுதியில் செயல்படும் என நினைக்கின்றேன்.
இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டது என்னுடைய கௌரவமாக நினைக்கின்றேன். பல நல்ல விஷயங்களை நான் இந்த பயணத்தில் அனுபவித்தேன். இது என்னுடைய கனவு என்று கூறினார். மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதில் சகிப் மகமுத் சேர்ந்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் எய்டன் மார்க்கரம், நாங்கள் சேஸ் செய்ய தான் இருந்தோம். இந்த தொடரில் நாங்கள் இதுவரை சேஸ் செய்யவில்லை. இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாக இருக்கிறார்கள். எங்கள் அணியில் டோனி டி சோர்ஸி மற்றும் டெம்பா பெவுமா ஆகியோருக்கு உடல் நலம் சரியில்லை.
அவர்களுக்கு பதில் ஸ்டப்ஸ் மற்றும் கிளாசன் ஆகியோர் அணிக்கு வந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து அதனை சேஸ் செய்ய முடியாமல் இங்கிலாந்து அணி 200 ரன்க்குள் சுருண்டால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.