கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு போட்டி முடிவதற்கு முன்பே தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றிருக்கிறது. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி நான்கு புள்ளிகள் உடன் அரை இறுதிக்கு சென்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலைதான் இருந்தது.
ஆனால் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால், அது ஆப்கானிஸ்தான் ரன் ரேட்டை விட குறைந்திருக்கும். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி தொடரை விட்டு சென்று இருக்கும். இந்த சூழலில் அதற்கு ஏற்ற வகையில் இங்கிலாந்து அணியும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இதனால் இங்கிலாந்து அணி 400 ரகளுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்க ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் இங்கிலாந்து அணி வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக பெரும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர் பில் சால்ட் 8 ரன்களிலும், பென் டக்கட் 24 ரன்களிலும், ஜெமி ஸ்மித் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் 37 ரன்களில் போல்ட் ஆனார். அதேபோன்று ஹாரி புரூக் 19 ரன்களில் ஆட்டம் இழக்க, கேப்டனாக தன்னுடைய கடைசி இன்னிங்சில் விளையாடிய ஜாஸ் பட்லர் 21 ரன்கள் தான் சேர்த்தார்.
லிவிங்ஸ்டோன் 9 ரன்களிலும், ஜெமி ஓவர்டன் 11 ரன்களிலும் ஜோப்ரா ஆர்ச்சர் 25 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் மார்க்கோ யாசென் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டுகளையும், வியான் முல்டர் மூன்று விக்கெட்டுகளையும் கேசவ் மஹாராஜா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.தென்னாப்பிரிக்கா அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டிய நிலையில், இங்கிலாந்து அடித்ததே 179 ரன்கள் என்பதால் தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை. இதனால் போட்டி முடிவதற்கு முன்பே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.