லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
ரன்குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் விருந்து ரசிகர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தருணத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் களமிறங்கினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் மிகவும் மோசமாக விளையாடியது. தொடக்க வீரரான பென் டக்கட் 8 பந்துகளில் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைப் போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் நாயகன் ஜோ ரூட், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறுகிறார்.
17 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 14 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். ஒரு புறம் ஜெமி ஸ்மித் மட்டும் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 54 ரன்கள் சேர்க்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹாரி புரூக் தேவையில்லாமல் ரன் அவுட்டில் சிக்கி ஆட்டம் இழந்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 17 ரன்களை சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் நடுவரிசை வீரர்களான ஜாஸ் பட்லர் 15 ரன்களிலும், ஜேக்கப் பெத்தல் 7 ரன்களிலும், வில் ஜாக்ஸ் மூன்று ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் ஒரே ஓவரில் தொடர்ந்து இரண்டு விக்கெட் கைப்பற்றி ஹட்ரிக் சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆதில் ரசீத் ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்டு விக்கெட் விழாமல் தடுத்தார். இங்கிலாந்து அணி 24.3 ஓவர்களில் 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் கேசவ் மகாராஜ் நான்கு விக்கெட்டுகளையும் வியான் முல்டர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.