மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷாந்த் மதுஷ்கா மற்றும் கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர். இதில் நிஷாந்த் மதுஷ்கா நான்கு ரன்களும், கருணரத்னே இரண்டு ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் டக்அவுட் ஆகி வெறியறினார். இதனால் இலங்கை அணி 6 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து குசன் மெண்டிஸ் அதிரடியாக ஆட முற்பட்டு 34 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் 17 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கமிந்து மெண்டிஸ் 12 ரன்களும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்களும், விஸ்வா பெர்ணாண்டோ 13 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 113 ரன்கள் சேர்ப்பதற்குள் இலங்கை 7 விக்கெட் இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து கேப்டன் தனஞ்செய்ய டி சில்வா மற்றும் அறிமுக வீரராக களம் இறங்கிய மிளான் ரத்தின நாயகே இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கேப்டன் தனஜெய டீ சில்வா 74 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, பவுலரான மிலன் ரத்தநாயக்கா அபாரமாக ஆடி 135 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார்.
இவர்கள் இருவரின் இன்னிங்ஸ் காரணமாக இலங்கை அணி 236 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் கிரிஸ் ஒக்ஸ் மற்றும் சோயிப் பசீர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடுகிறது. முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.