லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஸ்பின்னராக பவுலிங் செய்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று புரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர்.
இங்கிலாந்து - இலங்கை அணிக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் 44.1 ஓவர்கள் மட்டும் முதல் நாளில் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்திருந்தது.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் கேப்டன் போப் 103 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 8 ரன்களுடனும் தொடங்கினர். இதன்பின் இலங்கை அணியின் ரத்னநாயகே மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா இருவரின் பவுலிங்கில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய போப் 156 பந்துகளில் 2 சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 154 ரன்களை விளாசினார்.
பின்னர் வந்த வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தாண்டாததால் இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இலங்கை அணி தரப்பில் ரத்னநாயகே 3 விக்கெட்டுகளையும், சில்வா, விஸ்வ ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இலங்கை அணியின் நிசாங்கா - கருணரத்னே இருவரும் பேட்டிங்கை தொடங்கினர்.
கருணரத்னே செய்த தவறால் 9 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அப்போது 6.2 ஓவரின் போது, நடுவர்கள் போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி ஸ்பின்னர்கள் மட்டுமே பவுலிங் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் ஓவரை முடிக்க வேண்டிய கட்டாயம் கிறிஸ் வோக்ஸ்-க்கு வந்தது. இதனால் உடனடியாக வோக்ஸ் ஆஃப் ஸ்பின் வீசுவதாக நடுவரிடம் கூறினார்.
இதனால் ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். அவரால் உடனடியாக ஆஃப் ஸ்பின்னிற்கான பவுலிங் ஆக்ஷனை கொண்டு வர முடியவில்லை என்றாலும், நடுவருக்கு அருகில் நின்று ஆஃப் ஸ்பின்னை போல் பந்தை வீசினார். அந்த 4 பந்துகளில் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டது. இதன்பின் வெளிச்சம் வந்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் தனது பழைய ஸ்டைலில் வேகப்பந்துவீச்சை மேற்கொண்டார்.
அடுத்த சில ஓவர்களிலேயே குசால் மெண்டிஸை 14 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இலங்கை அணி 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிண்டு மெண்டிஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் கடந்த இருவரும், ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தியுள்ளனர்.