கொழும்பு: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக், 57 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், ப்ரூக் 66 பந்துகளில் 136 ரன்கள் குவித்து, ரசிகர்களை பரவசப்படுத்தினார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
26 வயதான புரூக், இங்கிலாந்து இன்னிங்ஸின் 49வது ஓவரின் முதல் பந்தில் ஜெஃப்ரி வாண்டர்சேயை பவுண்டரிக்கு விரட்டி தனது சதத்தை நிறைவு செய்தார். சதம் எடுத்த பிறகு, அவர் செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபல மல்யுத்த வீரர் "ஸ்டோன் கோல்ட்" ஸ்டீவ் ஆஸ்டின் பாணியில் பீர் பாட்டில்களை அடித்து உடைக்கும் கொண்டாட்டத்தை ப்ரூக் செய்தார். இந்தப் பல வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த ஆட்டத்தில், நான்காவது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்து 113 பந்துகளில் 191 ரன்கள் சேர்த்தார் ப்ரூக். ஜோ ரூட்டும் அவுட்டாகாமல் 111 ரன்கள் அடித்து சதம் விளாசினார். ஐந்தாம் நிலை பேட்ஸ்மேனாகக் களமிறங்கி அசத்திய ப்ரூக், இங்கிலாந்து கேப்டனாக அதிவேக சதம் அடித்த மோர்கனின் சாதனையையும் சமன் செய்தார். மோர்கன் 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டரில் 57 பந்துகளில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்களின் பட்டியலில், ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 2015 நவம்பர் 20 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் 46 பந்துகளில் சதம் விளாசினார். 2022 ஜூன் 17 அன்று நெதர்லாந்துக்கு எதிராக 47 பந்துகளிலும், 2019 மே 11 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் 50 பந்துகளிலும் பட்லர் சதம் அடித்துள்ளார். மொயீன் அலி 53 பந்துகளிலும், ஜானி பேர்ஸ்டோ 54 பந்துகளிலும் சதமடித்துள்ளனர். ஹாரி ப்ரூக் மற்றும் எயோன் மோர்கன் இருவரும் 57 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.
கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த உலக சாதனை தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் வசம் உள்ளது. அவர் 2015 ஜனவரி 18 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வெறும் 31 பந்துகளில் சதமடித்து இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தினார். இந்த பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா (45 பந்துகள்), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி (53 பந்துகள்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஏபி டி வில்லியர்ஸ் மூன்று தனித்தனி போட்டிகளில் கேப்டனாக மிக வேகமாக சதமடித்து இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்.
மறுபுறம், இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஜோ ரூட், தனது 20வது ஒருநாள் சதத்தை எட்டி புதிய சாதனையைப் படைத்தார். இங்கிலாந்து அணிக்காக 20 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் 35 வயதான ரூட் பெற்றார். துனித் வெல்லலகே வீசிய 45வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். ரூட் இந்த சதத்தை அடைய 100 பந்துகளை எடுத்துக்கொண்டார். இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில், ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக எயோன் மோர்கன் 13 சதங்களுடன் உள்ளார். மோர்கன் தனது 13 வருட ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 225 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்தார்.