இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அணி.. டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஐசிசி டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 30 ரன்களைக் கடந்த போதிலும், அவர்களால் அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
125 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டத்தை தன்வசப்படுத்தியது. 6 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்து மிரட்டியது. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் ஜோடி இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடி வெறும் 38 பந்துகளில் 85 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனி பேக்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இத்தொடரில் 217.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் தொடர் நாயகன் விருதை வென்றார். டி20 தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, அடுத்ததாக செப்டம்பர் 22 அன்று தொடங்கவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.


Click it and Unblock the Notifications


