லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் தனது 34வது சதத்தை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ஜோ ரூட், சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சதம் காரணமாக 427 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி வெறும் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறியது.

இதனால் 231 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் இங்கிலாந்து அணி வீரர்கள் விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் டக்கெட் 24 ரன்களிலும், கேப்டன் போப் 17 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 37 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு பக்கம் ஜோ ரூட் வழக்கம் போல் தேவைக்கேற்ப அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாட, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் மொத்த கட்டுபாட்டையும் ஜோ ரூட் தன் மீது ஏற்றிக் கொண்டார். டெய்லண்டர்கள் யாருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்காமல் பவுண்டரிகள் மூலமாகவே ரன்களை சேர்க்க தொடங்கினார்.
இப்படி பேட்டிங் செய்தவாறே ஜோ ரூட் 90 ரன்களுக்கு மேல் செல்ல, அவர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அப்போது ஸ்டோன் அவருக்கு கம்பெனி கொடுக்க, லஹிரு குமாரா வீசிய பந்தில் பவுண்டரி அடித்து தனது 34வது சதத்தை விளாசி தள்ளினார். சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஜோ ரூட், காற்றில் கைகளை குத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ஹெல்மட்டை கழற்றி ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.
இதன் மூலமாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய அலைஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் 34 டெஸ்ட் சதங்களை விளாசிய முதல் வீரர் ஜோ ரூட் தான். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் சதம் விளாசி புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.
அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 4வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் அடிக்கும் 50வது சதம் இதுவாகும். இந்த சாதனையை படைக்கும் 9வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ஜோ ரூட்டிற்கு கிடைத்துள்ளது. அதேபோல் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழகக், இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இலங்கை அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 483 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணி தரப்பில் அஷிதோ ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், மிலன் மற்றும் ஜெயசூர்யா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.