ஜாஸ் பட்லர் மாபெரும் உலக சாதனை.. டி20 கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை தொட்ட முதல் வீரர் என பெருமை
லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரோன் பொல்லார்ட் வைத்திருந்த 14,999 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து பட்லர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடிய போது, ஐந்தாவது ஓவரில் எஷான் மலிங்காவின் பந்துவீச்சில் ஒரு ரன் எடுத்ததன் மூலம் பட்லர் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். தனது 528-வது டி20 போட்டியில் விளையாடிய பட்லர், 35.46 சராசரியிலும் 147.46 ஸ்டிரைக் ரேட்டிலும் 15,000 ரன்களை குவித்துள்ளார். அவரது இந்த சாதனையில் 9 சதங்களும், 107 அரைசதங்களும் அடங்கும்.

754 போட்டிகளில் விளையாடி 31.71 சராசரியுடன் 14,999 ரன்கள் குவித்திருந்த கீரோன் பொல்லார்டின் சாதனையை பட்லர் தற்போது கடந்துள்ளார். இங்கிலாந்து விக்கெட் கீப்பரான பட்லர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இங்கிலாந்து, லங்காஷயர், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சோமர்செட், பார்ல் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சிட்னி தண்டர், கொமிலா விக்டோரியன்ஸ், டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஜோஸ் பட்லர் 15,000 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸின் கீரோன் பொல்லார்ட் 14,999 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,581 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 14,562 ரன்கள். நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 14,284 ரன்கள் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 14,218 ரன்களுடன் இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் வின்ஸ் 14,187 ரன்கள், பாகிஸ்தானின் சோயப் மாலிக் 13,571 ரன்கள், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 13,046 ரன்கள் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் 12,782 ரன்கள் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
போட்டியைப் பொறுத்தவரை, கார்டிஃப் நகரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, பதும் நிசங்கா 37 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிரடியான தொடக்கத்தைப் பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் லியாம் டாசன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சரிவை ஏற்படுத்தியதால், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவர்பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்த போதிலும், தங்களது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஹாரி புரூக் 3 சிக்ஸர்களை விளாச, டாம் பான்டன் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து அணியை வெற்றி நோக்கி வழிநடத்தினார். பட்லர் 30 ரன்களும், புரூக் 23 ரன்களும் பங்களிக்க, இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் 47 பந்துகள் மீதமிருக்கையிலேயே அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications
" width="200" height="113">
