நாட்டிங்ஹாம்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக போப் 121 ரன்களையும், டக்கெட் 71 ரன்களையும் விளாசினர்.
இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்து களத்தில் உள்ளது. சிறப்பாக ஆடிய கவெம் ஹாட்ஜ் 120 ரன்களை விளாசி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் விளையாடிய முதல் தொடரிலேயே கவெம் ஹாட்ஜ் சதம் விளாசியது இங்கிலாந்து அணி ரசிகர்களையும் வியப்படைய செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின் போது கவென் ஹாட்ஜ் - மார்க் வுட் இடையிலான போட்டி கவனத்தை ஈர்த்தது. 42வது ஓவரை வீசிய மார்க் வுட் ஒவ்வொரு பந்தையும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசிக் கொண்டே இருந்தார். இதனை எதிர்பார்க்காத கவெம் ஹாட்ஜ், நிதானமாக எதிர்கொண்டு விக்கெட் கொடுக்காமல் தப்பித்தார்.
ஒவ்வொரு பந்தும் 153 கிமீ வேகத்திற்கு மேலாக வீசப்பட்ட போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கவென் ஹாட்ஜ் பேசுகையில், நிச்சயம் இது கொஞ்சம் கொடூரமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு பந்தும் 90 மைல் வேகத்தில் முகத்திற்கு முன் வீசப்படும் போது, கவனமாக இருக்க வேண்டும்.
அதிலும் ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் ஒரு பவுலர் ஒவ்வொரு பந்தையும் 90 மைல்களுக்கு மேல் வீசுவதை ஏற்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மார்க் வுட்டிடம் சென்று, எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்று கூறிவிட்டேன். இருவரும் சிரித்து கொண்டே நகர்ந்தோம். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசியது மனதளவில் நிம்மதியை கொடுக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் எப்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவாலை கொடுக்கும். மனதளவில் நம்மை பாடுபடுத்தும் வடிவம் தான். ஆனால் மார்க் வுட் போன்ற ஒரு பவுலரை எதிர்கொண்டு சவாலான நேரத்தில் சதம் அடிப்பது மகிழ்ச்சியையும் மன உறுதியையும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.