மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 112 மீட்டர் தூரம் சிக்சர் அடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்துகளில் 109 ரன்களை விளாசி அசத்தினார்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு ஆல்ரவுண்டரான ரொமாரியோ ஷெப்பர்ட் முக்கிய காரணமாக அமைந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர், 28 பந்துகளில் 3 சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரி உட்பட 48 ரன்களை விளாசி அசத்தினார். அதில் சாம் கரண் வீசிய ஒரு பந்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்த சிக்ஸ் 112 மீட்டர் தூரம் சென்று விழுந்தது.
ஃபினிஷர் ரோலில் களமிறங்கி வரும் ரொமாரியோ ஷெப்பர்ட் மிரட்டலான இன்னிங்ஸை ஆடியது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் சில வாரங்களுக்கு முன் லக்னோ அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை அணி நிர்வாகம் பெற்று கொண்டது. இதற்கு பதிலாக மும்பை அணி லக்னோ அணிக்கு பணத்தை வழங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வரும் ரொமாரியோ ஷெப்பர்ட் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடிய வீரர். இன்னும் சொல்லப்போனால் 10 ஓவர்களை முழுமையாக வீசக் கூடிய வீரர். இதனால் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் ரொமாரியோ ஷெப்பர்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். கேமரூன் க்ரீன் இடத்தை மும்பை அணியால் எளிதாம ரொமாரியோ ஷெப்பர்ட் மூலம் நிரப்ப முடியும்.
உலககக்கோப்பை தொடரின் போது இந்த டிரேடிங் நடைபெற்றதால், இதற்கு பின் பொல்லார்ட் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் கேமரூன் க்ரீனை விடுவிக்கும் முடிவை மும்பை அணி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பாகவே எடுத்துள்ளதாக இதன் மூலம் தெரிய வருகிறது. இதனால் மும்பை அணி அடுத்த ஐபிஎல் தொடரில் அபாயகரமான அணியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.