பர்மிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து அணி ஜோ ரூட் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சரித்திர புகழ்வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலே - டக்கெட் கூட்டணி களமிறங்கியது. கடந்த ஆஷஸ் தொடரில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, இந்த ஆஷஸ் தொடர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கியது.

வழக்கம் போல் Bazball திட்டத்துடன் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆட தொடங்கினர். இதனால் டக்கெட் 12 ரன்களிலும், போப் 31 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின்னர் கிராலே - ரூட் கூட்டணி இணைந்து அதிரடியை தொடர்ந்தது. அரைசதம் விளாசி கிராலே ஆட்டமிழந்த நிலையில், ஆட்டத்தை முழுக்க முழுக்க ஜோ ரூட் கையில் எடுத்துக் கொண்டார். நிதானமாக ஆடிய ஜோ ரூட், ஆஸி. அணியின் முக்கிய பந்துவீச்சாளரான போலாந்த் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி விளாசி மிரட்டினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓய்வுக்கு பின் வந்த பேர்ஸ்டோவ் 78 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 369 பந்துகளில் 300 ரன்களை கடந்து அசத்தியது. எதிர்முனையில் வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும், மறுமுனையில் ஜோ ரூட் நிலைத்து நின்று லயனை வெளுத்து வாங்கினார்.
சிறப்பாக ஆடிய ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ஜோ ரூட் சதம் விளாசி இருப்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர் சதம் விளாசிய பின்னர் லயன் வீசிய 78வது ஓவரில் மட்டும் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசி இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.