மும்பை: டி20 உலக கோப்பைக்கு முன்னதாக, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் , இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியில் ஹாரி புரூக் மற்றும் டாம் பேன்டன் முக்கியப் பங்காற்றினர்.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பைக்கான ஒரு முன்னோட்டம் போல அமைந்த இத்தொடர், இங்கிலாந்தும் கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்புடைய அணியாக வலம் வருகிறது, முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, இரண்டாவது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரில் முன்னிலை பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பதும் நிசங்கா, கமில் மிஷாரா ஜோடி 33 பந்துகளில் 56 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கமளித்தது. முதல் போட்டியில் தடுமாறிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இம்முறை சிறப்பாகச் செயல்பட்டு, சவாலான இலக்கை நிர்ணயிப்பதில் உதவினர்.
தனஞ்ஜெய டி சில்வாவுக்குப் பதிலாக களமிறங்கிய பவான் ரத்நாயக்க, தனது அறிமுக ஆட்டத்திலேயே 22 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். முதல் டி20-ல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறிய இலங்கை, ரத்நாயக்கவின் நிதானமான ஆட்டத்தால் அந்த பலவீனத்தை திறம்பட சமாளித்தது.
இலக்கை துரத்திய இங்கிலாந்து 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, இங்கிலாந்துக்கு 17 ஓவர்களில் 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இச்சூழலில், இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்து, இங்கிலாந்தை ரன்ரேட்டில் பின்தங்கச் செய்தனர்.
எனினும், ஹாரி புரூக் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை உடைத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் வெறும் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அதிரடியாக 36 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தார். இத்தாக்குதல் இங்கிலாந்தின் ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது.
புரூக்கின் அதிரடியால், இங்கிலாந்துக்கு 27 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர், டாம் பேன்டன் 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்து, அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். இங்கிலாந்து அணி 2 பந்துகள் மீதமிருக்க, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், "இது அருமையான செயல்பாடு. உலகக் கோப்பைக்கு நாங்கள் சிறப்பாகத் தயாராகி வருகிறோம், இதைவிட சிறந்ததை வீரர்களிடமிருந்து கேட்க முடியாது. எங்கள் பேட்டிங், பந்துவீச்சு நன்றாக உள்ளது. குறிப்பாக சுழல், இது உலகக் கோப்பையில் முக்கிய காரணியாகும் என்று எங்களுக்குத் தெரியும்" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷானகா, "எங்கள் பேட்டிங் திருப்தி அளிக்கிறது. பவான் ரத்நாயக்க சிறப்பாக விளையாடினார். சிறப்பாக முடிக்கவில்லை என்றாலும், படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு போராடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டி வெறும் சடங்குப் போட்டியாக இருக்கும். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.