
டாஸ் வென்ற இலங்கை அணி
இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓப்பனர்கள் ஜானி பேர்ஸ்டோ - டேவிட் மலான் ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மோசமான ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு காரணமாக பேர்ஸ்டோ 51 ரன்களும், டேவிட் மலான் 76 ரன்களும் சேர்ந்து அவுட்டாகினர்.

கடின இலக்கு
பின்னர் வந்தவர்கள் அதிரடியாக ஆட நினைத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு180/6 ரன்கள் சேர்த்தனர். இலங்கை பவுலர் சமீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

படு சொதப்பல்
181 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி பெரும் ஏமாற்றம் கொடுத்தது. படுமோசமான பேட்டிங்கினால் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் தடுமாறி வெளியேறினர். குறிப்பாக அணியில் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தார்கள். 9ஆவது இடத்தில் களமிறங்கிய பெர்ணான்டோ அதிகபட்சமாக 20 (14) ரன்கள் சேர்த்தார். இதனால் இறுதியில் இலங்கை அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இந்த டி20 தொடரில் 3-0 என தோற்றது இலங்கை அணி.

உலகக்கோப்பை தகுதிச்சுற்று
சமீக காலமாக இலங்கை அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே மிக மோசமாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் 3 போட்டிகளிலும், 129,111, 91 ஆகிய ஸ்கோர்களை மட்டுமே அடித்துள்ளது. வரும் டி20 உலகக்கோப்பையில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12க்கு சென்றுவிட்டன. ஆனால் இலங்கை அணி தகுதிச்சுற்று மூலம் மட்டுமே உள்ள செல்ல வேண்டியுள்ளது. இதில் வெற்றி பெறுமா என்பதே தற்போது சந்தேகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











