அகமதாபாத்: உலகக்கோப்பை தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேச அணியே 9வது இடத்தில் இருக்கும் சூழலில், இங்கிலாந்து அணி 10வது இடத்தில் இருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் தரப்பில் வீரர்களுக்கான ஒப்பந்தம் பட்டியல் வெளியாகியது. அந்த பட்டியலில் டேவிட் வில்லியின் பெயர் இல்லை. இதனால் கோபமடைந்த டேவிட் வில்லி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வில்லி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஓய்வு குறித்து டேவிட் வில்லி தனது சோசியல் மீடியா பக்கத்தில், சிறுவயதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் இருந்தவன். ஆனால் இப்படியொரு நாள் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. உலகக்கோப்பை தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் பயணமும் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இங்கிலாந்து அணியின் ஜெர்சியை பெருமிதத்துடன் அணிந்து, ஒவ்வொரு முறையும் முழுமையாக வெற்றிக்காக போராடி இருக்கிறேன். மிகச்சிறந்த அணியின் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பயணத்தில் மிகச்சிறந்த தருணங்கள், நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதேபோல் பயணித்தின் போது கடினமான காலங்கள் இருந்தன. எனது கனவுக்காக தாய், தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஏராளமான தியாகங்களை செய்துள்ளார்கள். அவர்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியம் கிடையாது.
நான் துண்டு துண்டாக சிதறிய போதும், என்னை மீண்டும் உருவாக்கியதற்காக நன்றிக்கடன்பட்டுள்ளேன். இன்னும் களத்திலும், களத்திற்கு வெளியேயும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் டேவிட் வில்லி கலந்துகொள்வார் என்று தெரிகிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது ஆர்ச்சரை அணியில் சேர்த்த பின், டேவிட் வில்லி கழற்றிவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.