லண்டன்: ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களோடும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 377 ரன்கள் என்ற பிரம்மாண்ட முன்னிலையுடன் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசுகையில், நாளை அல்லது திங்கட் கிழமை தான் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாளாக இருக்கப் போகிறது. என் வாழ்வின் இந்தப் பயணம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. எப்போதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிவதை பெருமையாக கருதியுள்ளேன். இந்த ஆஷஸ் தொடரை அதீத மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.
நேற்றைய இரவு 8.30 மணியளவில் ஓய்வு முடிவை எடுத்தேன். கடந்த இரு வாரங்களாக ஓய்வை பற்றி சிந்தித்து வந்தேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் பிடித்த ஒன்று. எனக்கும், எங்கள் அணிக்கும் அளிக்கப்படும் சவால்கள் பிடித்த ஒன்று. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சவால்களை ரசித்து எதிர்கொண்டுள்ளேன். அதேபோல் ஆஷஸ் தொடரில் தான் எனது கடைசி பேட்டிங் மற்றும் பவுலிங் அமைய வேண்டும் என்று விரும்பினேன்.
நேற்றிரவில் பென் ஸ்டோக்ஸிடமும், எனது அணியினரிடம் இன்று காலையிலும் கூறினேன். அதுதான் சரியான நேரமாக தோன்றியது. இந்த முடிவை பென் ஸ்டோக்ஸிடம் சொல்வது வரை அரை மனதாகவே இருந்தேன். ஆனால், ஓய்வு பற்றி கூறிய பின் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட்டில் நான் படைத்த சாதனைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அண்மையில் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.