லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் தனியாளாக இலக்கை எட்டிவிடுவார் என்ற நம்பிக்கையை பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்.
என்னதான் இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றாலும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் பலருக்கும் வியப்பை கொடுத்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹெட்டிங்லே போட்டியை மீண்டும் நினைவுபடுத்திவிட்டார் என்றே சொல்லலாம். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் போது ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் இருக்கும்.

ஆனால் மிடில் ஆர்டரில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கும் போது மற்றவர்களை காட்டிலும் அதிக முறை ஆட்டத்தை முடித்துவிடுகிறார். ஃபினிஷிங் பற்றி யோசிக்கும் போது என் மனதில் முதல் தோன்றும் வீரர் தோனி தான். ஏராளமான டி20 போட்டிகளை தனியாளாக வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்திருக்கிறார். அதனை பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்து வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஃபினிஷிங் ரோல் என்பதை பலரும் எடுத்துக் கொண்டது கிடையாது. அதிலும் கேப்டனாக இருக்கும் வீரர், ஃபினிஷராக இருந்ததே இல்லை. 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஹெட்டிங்லே ஆட்டத்தை போல் லார்ட்ஸ் மைதானத்தில் தனியாளாக வெற்றிபெறுவார் என்றே நினைத்தனர்.
ஆனால் இம்முறை இலக்கு சற்று கூடுதலாக இருந்ததால், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. ரசிகர்கள், வீரர்கள் என்று அனைவருக்கும் நிச்சயம் ஹெட்டிங்லே ஆட்டம் நினைவில் வந்து சென்றிருக்கும். ஏனென்றால் ஹெட்டிங் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச்சை ஹாரிஸ் விட்டிருப்பார். அதேபோல் லார்ட்ஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேட்சை விட்டிருந்தார். இதனால் பலரும் மிரண்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.