மான்செஸ்டர்: 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் முடிவை தாமதமாக எடுத்துவிட்டதாக எழுந்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோபமாக பதில் அளித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் மழை மொத்தமாக ஆடியதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 4வது போட்டியை வென்று ஆஷஸ் தொடரை 2-2 என்று சமன் செய்திடலாம் என்ற இங்கிலாந்து அணியின் ஆசையை மழை சுக்குநூறாக்கியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து அணியால் ஒருமுறை கூட ஆஷஸ் கோப்பையை தக்க வைக்கவோ, கொண்டு வரவோ முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டத்தை கொண்டு வந்து, புதிய யுக்தியை செயல்படுத்தியது. ஆனால் பேஸ் பால் திட்டத்தாலும் கூட ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்துக்கு கொண்டு வர முடியவில்லை. மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை ஆஸ்திரேலியா எடுத்து செல்லவுள்ளது.

இந்த நிலையில் 4வது போட்டி டிராவில் முடிவடைந்ததற்கு, இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் முடிவை தாமதமாக எடுத்ததே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், இந்தப் போட்டியின் முடிவு வருத்தமளிக்கிறது. முதல் 3 நாட்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியும், வானிலை காரணமாக தோல்வியின் பக்கம் நிற்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் கிரிக்கெட்டில் இதுவும் ஒரு பயணம் தான். வாழ்வா சாவா போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம்.
நிச்சயம் அடுத்தப் போட்டியில் பெருமையுடன் களமிறங்குவோம். கிராலி கற்பனை செய்ய முடியாத ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டார். அதேபோல் பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறார்கள். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் விரைந்து டிக்ளேர் செய்ததால் தோல்வியடைந்தோம் என்றும், இந்தப் போட்டியில் விரைந்து டிக்ளேர் செய்யாததால் தோல்வியின் பக்கம் நிற்கிறோம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.
இப்படி விமர்சிப்பவர்கள், எங்களையும் எங்களின் கிரிக்கெட்டையும் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நிச்சயம் கடைசி போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருக்கிறது. அதுதான் இங்கிலாந்து அணியின் ஆதரவாளர்களும் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.