ஹலோ மட்டும்தான் சொல்வோம்.. கையெல்லாம் குலுக்க மாட்டோம்.. கொரோனா வந்துருச்சுன்னா!
லண்டன்: கொரோனா வைரஸ்தான் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதோ கிரிக்கெட் உலகையும் அது ஒரு வகையான பீதிக்குள்ளாக்க ஆரம்பித்துள்ளது.
Recommended Video
சீனாவில் கிளம்பிய இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது பல நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூரிலும் மேலும் பிற நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும்கூட இந்த ஆபத்து இப்போது எட்டிப் பார்த்துள்ளது.
இந்த நிலையில் விளையாட்டு உலகிலும் கூட கொரோனா பீதி படரத் தொடங்கி விட்டது. குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொரோனா குறித்து சற்று கவனமாக செயல்பட தொடங்கியுள்ளது. விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அப்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவுள்ளனராம்.

2 டெஸ்ட் போட்டிகளில் மோதல்
இங்கிலாந்து அணியினர் இலங்கையில் வரும் 19 தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர். இலங்கையின் காலே மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டி வரும் 19ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் விளையாடிய இங்கிலாந்து அணியினர் 3க்கு 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தனர். ஆனால் தற்போதைய டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுகுறித்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து இலங்கை வீரர்களுடன் கை குலுக்க மாட்டோம். அதற்குப் பதில் fist bump (அதாவது கையை மடக்கி லேசாக ஒருவரை ஒருவர் டச் செய்து கொள்வது) மட்டும் செய்வோம் என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கவனமாக இருக்க வேண்டும்
எந்த இடத்திலும் கவனக்குறைவாக இருக்க முடியாது. காரணம், தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது பல வீரர்கள் சுகவீனமடைந்தனர். இருப்பினும் டூர் வெற்றிகரமாக முடிந்தது. இலங்கை டூரில் கூடுதல் கவனத்துடன் இருக்கப் போகிறோம் என்று ஜோ ரூட் தெரிவித்தார். மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அணி வீரர்கள் உணர்ந்துள்ளனர் என்றும் கூறினார்.

அணியினருக்கு அறிவுறுத்தல்
மேலும் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்றும் அணியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜோ ரூட், எங்கெல்லாம் புழங்குகிறோமோ அங்கெல்லாம் ஆன்டி பாக்டீரியல் லிக்விடை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கான ஜெல்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அதையும் பயன்படுத்துவோம் என்றும் கூறினார்.

முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோம்
கொரோனா பீதியால் டூர் பாதிக்கப்படாது. ரத்து செய்யவும் படாது. இருப்பினும் மிகுந்த முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக கையாளுவோம் என்றும் ஜோ ரூட் கூறினார். காரணம் இது அணியினரின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்றார் ஜோ ரூட். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி காலே மைதானத்தில் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications