லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் நடப்பாண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது.

முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வெறும் 60 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜோ ரூட் அதிகபட்சமாக 130 ரன்கள் குவித்தார். 331 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ரோஜர்ஸ் 52, வார்னர் 64 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
ஆனால், ஸ்மித் 5, மார்ஷ் 2, கேப்டன் கிளார்க் 14, விக்கெட் கீப்பர் நெவில் 17, ஜான்சன் 5 ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டி இங்கிலாந்துக்கு வெற்றியை இலகுவாக்கினர். ஆஸ்திரேலிய அணி இந்திய நேரப்படி இன்று மாலை 4.15 மணிக்கெல்லாம் 253 ரன்களில் (72.4 ஓவர்கள்) ஆல்-அவுட் ஆனது.
இதனால், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியாவில் நடந்த முந்தைய ஆஷஸ் தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆனது. சமீபத்தில் முடிந்த உலக கோப்பையில் காலிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ஆஷஸ் வெற்றி அந்த அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுத்துள்ளது.