லண்டன்:
இந்தியாவுக்கு எதிரான 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரையும் வென்றது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் கடைசி ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
இப்போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்ற முடியும் என்பதால் நேற்றைய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
6வது ஒரு நாள் போட்டியைப் போலவே, கங்குலியும், டெண்டுல்கரும் விளாசித் தள்ளுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் தொடக்கம் இருந்தது.
தட்டுத் தடுமாறி விளையாடிய கங்குலி, 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் பிளின்டாப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் மறு முனையில் டெண்டுல்கர் நிலைத்து ஆடிக் கொண்டிருந்தார்.
சிறப்பாக ஆடி வந்த அவர் எதிர்பாராதவிதமாக 30 ரன்கள் எடுத்த நிலையில் பிளின்டாப் பந்தில், பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் இது அவுட்டா என்பதில் பெரும் சர்ச்சை எழுந்தது. காரணம், பந்து, டெண்டுல்கரின் பேட்டில் படவே இல்லை என்பது டிவி ரீபிளேயில் மிகத் தெளிவாக தெரிந்தது. ஆனாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவரான ஆலம் தர், சச்சினை அவுட் ஆக்கி விட்டார்.
பெருத்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார் டெண்டுல்கர். பின்னர் வந்த காம்பிர் 12 ரன்களுடன் திரும்பினார். இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது களம் இறங்கினார் டிராவிட். ஆனால் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவரையும் சர்ச்சைக்குரிய முறையில் அவுட் ஆக்கினார் நடுவர் ஆலிம் தர்.
டிராவிட் பேட்டிலும் பந்து படாத நிலையில் அவரை அவுட் என்று கூறி விட்டார் தர். இந்த இரு முடிவுகளும் இந்தியாவின் தலையெழுத்தையே திருப்பிப் போட்டு விட்டன.
தொடர்ந்து வந்த வீரர்களில் யுவராஜ் சிங் 28 ரன்களும், ராபின் உத்தப்பா 22 ரன்களும் சேர்த்தனர். டோணி மட்டுமே சற்று தாக்குப் பிடித்து 50 ரன்களைச் சேர்த்தார். கடைசி வரிசை வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.
இறுதியில், 47.3 ஓவர்களிலேயே இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 187 ரன்களில் சுருண்டு போனது.
இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியரும், ரைட்டும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஆர்.பி.சிங்.
இதனால் இந்தியர்களிடையே நம்பிக்கை பிறந்தது. ஆனால் பின்னர் வந்த இயான் பெல் 36 ரன்களைச் சேர்த்தார். அவர் போன பின்னர் ஆட வந்த கெவின் பீட்டர்சனும், கேப்டன் காலிங்வுட்டும் சேர்ந்து இங்கிலாந்தை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றனர்.
பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை விளாசினார். காலிங்வுட் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். இறுதியில், 36.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 188 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியன் மூலம் 4-3 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டித் தொடரையும் வென்றது இங்கிலாந்து.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இங்கிலாந்து பேட்ஸ்மென் இயான் பெல் அறிவிக்கப்பட்டார். அவர் இத்தொடரில் 422 ரன்களை எடுத்துள்ளார்.